திங்கள், 10 ஜனவரி, 2011

தஞ்சாவூர் மாவட்டம்

தஞ்சாவூர் மாவட்டம்
தலைநகரம் : தஞ்சாவூர்
பரப்பு : 3,602.66 ச.கி.மீ
மக்கள் தொகை : 2,205,375
எழுத்தறிவு : 1,490,568 (76.07%)
ஆண்கள் : 1,0191,557
பெண்கள் : 1,113,818
மக்கள் நெருக்கம் : 1 ச.கீ.மீ - க்கு 931



பெயர்க்காரணம்:

தஞ்சாறை (ஆறை- அரண்) தஞ்சம் அடைந்தவர்களுக்கு அரணாக விளங்குவது என்னும் பொருளில் அமைந்துள்ளது.

வரலாற்றுச் சிறப்பு:

தஞ்சை மாவட்டம் பிற்கால சோழ மண்டலத்தின் முக்கியப் பகுதியாக விளங்கியது. காவிரியால் வளம் கொழிப்பதால் இதைப் பாடாத இலக்கியங்களே இல்லை என்று எண்ணும் அளவிற்கு புகழ் பெற்றது. தமிழகத்தின் ஒரே பேரரசான சோழ சாம்ராஜ்யத்தின் தலைநகராக ஆயிரம் ஆண்டு களுக்கு முன்னரே திகழ்ந்தது. பல்லவர்களின் கீழ் சோழர்கள் சிற்றரசர்களாக இருந்த காலத்தில் தஞ்சையை ஓர் நகராக்கி ஆண்டவர்கள் முத்திரையர்களே ஆவர். பிற்கால சோழராட்சியைத் தொடங்கி வைத்த விஜயலாய சோழன் முத்திரையர்களை வென்று தஞ்சையை தலைமையிட மாக்கியபின் கிட்டத்தட்ட சோழராட்சி 429 வருடங்கள் இருந்ததை யாரும் மறக்க முடியாது. சோழர்களுக்குப் பிறகு பாண்டியர்கள், பின்னர் செல்லப்ப நாயக்கர், சேவப்ப நாயக்கர், ரகுநாத நாயக்கர் ஆகியோரால் ஆளப்பட்டது; 1675 இல் மராட்டியர் கையில் விழுந்தது. சரபோஜி காலத்தில் வெள்ளையர்களால் எடுத்துக் கொள்ளப்பட்டது.

பொது விவரங்கள்:

தஞ்சை மாவட்டத்தின் தலைநகர் தஞ்சாவூர். இதன் பரப்பு: 3,602,86 ச.கி.மீ; மக்கள் தொகை: 21,38,845; பள்ளிகள்: 1558; கல்லூரிகள்: 30; பல்கலைக் கழகம்: தமிழ் பல்கலைக் கழகம்; ஆறுகள்: வெண்ணாறு, குடமுருட்டி, பாமினி ஆறு, அரசலாறு. காவிரி, கொள்ளிடம்; மழையளவு: சராசரி 102 மி.மீ; சாலை நீளம்: 2021.2 கி.மீ. பதிவு பெற்ற வாகனங்கள்: 18,556; மருத்துவமனைகள் 21; வங்கிகள் 224; தொலைபேசிகள்: 21,997; திரையரங்குகள் 98. எல்லைகள்: கிழக்கில் நாகை மாவட்டம் மற்றும் திருவாரூர் மாவட்டங்கள்; தென்மேற்கில் வங்காள விரிகுடா; மேற்கில் புதுக்கோட்டை; வடக்கில் திருச்சி மற்றும் கடலூர் மாவட்டங்கள்.

உள்ளாட்சிகள்:

நகராட்சி-3; தஞ்சை, பட்டுக்கோட்டை, கும்பகோணம்; ஊராட்சி ஒன்றியங்கள்-14, சட்டசபை தொகுதிகள்: 9; பட்டுக்கோட்டை, தஞ்சாவூர், பேராவூரணி, ஒரத்தநாடு, திருவோணம், திருவையாறு, பாபநாசம், கும்பகோணம், திருவிடைமருதூர்; நாடாளுமன்ற தொகுதி-1, தஞ்சாவூர்.

வழிபாட்டிடங்கள்:

தஞ்சாவூர், குடந்தை, சுவாமிமலை, திருவலஞ்சுழி, பட்டீஸ்வரம், திருவிடைமருதூர், திருநாகேசுவரம், ஒப்பிலியப்பன் கோவில், பூண்டி மாதா கோவில், வளத்தூர் மசூதி, திருவையாறு ஐயாறப்பர் கோவில், மாரியம்மன் கோவில்.

திருவிழாக்கள்:

12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் மகாமகம் குடந்தையில் நடைபெறும். தஞ்சையில் இராசராசனின் சதயத் திருநாள்; முத்துப் பல்லாக்கு; மாவட்டம் முழுவதும் ஆடிப்பெருக்கு, பொங்கல், கார்த்திகை, திருவையாரில் சப்தஸ்தானம், தியாகராஜ ஆராதனை முதலியன.

சுற்றுலாத் தலங்கள்:

தஞ்சை, குடந்தை, தாராசுரம், திருவிடைமருதூர், திருவையாறு, ஒரத்தநாடு, மனோரா மற்றும் சோழர்கள் கோயில்கள் உள்ள திருப்பனந்தாள், புள்ளமங்கை முதலிய ஊர்கள்.

தஞ்சை தந்த செல்வங்கள்:

வரலாற்றுக்கால பெருமக்கள்:

சோழர்கள், நாயக்கர்கள், மராட்டியர்கள், கம்பர், சேக்கிழார், நாட்டிய இசைக் கலை வளர்த்த தஞ்சை நால்வர்களான பொன்னையாபிள்ளை சகோதரர்கள். கரிகாலன் வரலாற்றை எழுதிய உலகநாத பிள்ளை, தமிழ் வரலாறு எழுதிய சீனிவாசம் பிள்ளை; கருணாமிருத சாகரம் தந்த ஆபிரகாம் பண்டிதர்; ஏடு எடுத்து தந்த ஏந்தல் இரட்டை குடை இரகுநாத ராஜாளியார்; கரந்தை தமிழ்ச் சங்கம் கண்ட தமிழ்வேள் உமா மகேஸ்வரம் பிள்ளை; நாடகமணி நவாப் இராஜமாணிக்கம் பிள்ளை; தமிழ் இலக்கியங்களை பதிப்பித்த உ.வே. சுவாமிநாதய்யர்; தஞ்சை மாவட்ட சேர்மன் பட்டுக்கோட்டை நாடிமுத்துப் பிள்ளை; பூண்டி வாண்டையார்; உக்கடை தேவர் முதலியோரை தஞ்சை மக்கள் மறப்பதில்லை. எழுத்தாளர்களில் வடுவூர் துரைசாமி, ஜானகிராமன், கரிச்சான் குஞ்சு முதலியோர்.


தஞ்சாவூர்:

தஞ்சாவூர் என்றதும் நினைவிற்கு வரக்கூடியது பெரிய கோவில்தான். இராஜராஜ சோழன் காலத்தில் கட்டப்பட்டது. இக்கோவில் 'பெருவுடையார் கோவில்' என்று அக்காலத்தில் அழைக்கப்பட்டது. தஞ்சைக் கோவிலின் விமானம்தான் தென்னிந்தியாவிலேயே உயரமானது. ஏறத்தாழ 190 அடி கோவிலின் மேல்தளம் 80 டன் எடை கொண்ட ஒரே கல்லால் அமைக்கப்பட்டது. இங்குள்ள லிங்கமும் பெரியது; நந்தியும் பெரியது. தமிழகத்தில் வேறெங்கும் இவ்வளவு பெரிய அளவு சிற்பங்கள் கிடையாது. ஒரே கல்லாலானவை இவை. கருவறைக் கோபுர நிலைகளின் உள்ளே ஆடவல்லான் ஆடிய 108 கரணங்களில் 81 மட்டும் செதுக்கப்பட்டுள்ளது. மற்றவை செதுக்க இடம் விடப்பட்டுள்ளது. இதன் சுற்றுச் சுவர்களில் 10-ஆம் நூற்றாண்டு சோழர் கால ஓவியங்கள் கிடைத்துள்ளன. சோழர் காலத்திற்கு பின்னர் நாயக்கர் காலத்தில் பிள்ளையார், முருகன் கோவில், அம்பாளுக்கான தனிக் கோவில், நந்தி மண்டபம் முதலியவை கட்டப்பட்டன. கோவிலே கோட்டை போல காணப்படுகிறது. கோவிலைச் சுற்றி அகழி இருக்கிறது. அகழிக்கு ல்லணைக் கால்வாயிலிருந்து தண்ணீர் வருகிறது.

சிவகங்கைப் பூங்கா:

கோவிலை ஒட்டி சிவகங்கைப் பூங்கா இருக்கிறது. இது ஒரு அழகான பூங்கா. இங்கு சிறு விலங்குகள், பறவைகள் உள்ளன. பூங்காவைச் சுற்ற இரயில், குழந்தைகள் விளையாட ஊஞ்சல், மற்ற விளையாடும் இடங்கள் உள்ளன. உள்ளே சிவகங்கைக் குளம் என்ற பெரிய குளம் இருக்கிறது. இதன் இடையே செல்ல டிராலி ரயில் இருக்கிறது.

அரண்மனை:

சோழர் கால அரண்மனை அழிந்த பிற்பாடு, நாயக்கர் காலத்தில் கருடன் பறப்பது போன்ற வடிவத்தில் ஓர் அரண்மனை கட்டப்பட்டுள்ளது. அரண்மனையினுள் முதலில் நுழைந்தவுடன் நம் கண்ணில் படுவது கூட கோபுரமும், மாட மாளிகையும்தான். அதற்கடுத்து சங்கீத மகால். இந்த சங்கீத மகால் இசை, நாட்டிய சாத்திர அளவுகளுக்கு ஏற்றபடி கட்டப் பட்டுள்ளது. எங்கிருந்து பாடினாலும் ஒலி ஒரே மாதிரி இருக்கும்! இந்த கட்டிடத்தின் அருகிலேயே குளம் போன்ற பகுதியில் தண்ணீரை கட்டித் தேக்கி விடுவார்களாம். மகாலில் மேளக்கட்டு ஒரே மாதிரி இருப்பதற்கு இதுதான் காரணம் என்று இசைதமிழ் விற்பன்னர் சுந்தரேசனார் சொல்லுவார்.

கலைக்கூடம்:

அரண்மனையின் ஒரு பகுதி கலைக்கூடமாகும். இதன் வழியாகவே நாம் கூட கோபுரம், மாடமாளிகையிலும் ஏறிக் காண முடியும். இக்கலைக்கூடம் இராஜராஜ சோழன் கலைக்கூடம் என அழைக்கப்படுகிறது. தஞ்சை மாவட்டம் முழுவதும் உள்ள சோழர்கால கோவில்களில் சிதைந்தவற்றை தொகுத்து இக்கலைக்கூடம் உருவானது. இது உருவாக அக்கால மாவட்ட ஆட்சித் தலைவராக இருந்த டி.கே. பழநியப்பன், தொ.மு. பாஸ்கர தொண்டைமான், இராமச்சந்திர பத்தர் முதலியோரே காரணகர்த்தாக்கள். இங்குள்ள சிற்பத் தொகுதிகளில் மிகப் பெரிய பிரம்மா, இரண்டாம் இராசராசன் சிற்பம், கஜசம்கார மூர்த்தி, விஷ்ணு, புத்தர், மகாவீரர், அய்யனார், சப்தமாதர்கள், பிஷாடனர், போன்ற சிற்பங்கள் மறக்க முடியாதவை. ஒரு பகுதி, மிகப்பெரிய மகாலில் ஐம்பொன் சிற்பத் தொகுதிகள் வைக்கப்பட்டுள்ளன. இவற்றில் சோழர்கால செப்புத் திருமேனிகளின் கைவண்ணத்தைப் பார்த்து ரசிக்காத மக்களே கிடையாது. இம்மகாலின் நடுவே சலவைக் கல்லால் செதுக்கப்பட்ட சரபோஜியின் கம்பீரமான சிலை கவர்ச்சிகரமாக அமைக்கப்பட்டுள்ளது.

சரஸ்வதி மகால் :

யானைக் கட்டும் கட்டுத்தறிக்கு எதிரே சரஸ்வதி மகால் இருக்கிறது. சோழர் காலத்தில் உண்டாக்கப்பட்ட 'சரஸ்வதி பண்டாரம்' என்ற நூல் நிலையமே பின்னர் வந்த மராட்டியர் களால் செழுமைபடுத்தப்பட்டது என்று ஆய்வாளர் வேணுகோபால் தெரிவிக்கிறார். முதலில் நம்மை வரவேற்பது மராட்டியர் கால ஓவியமான சரஸ்வதி. உள்ளே நுழைந்தவுடன் இராமர் பட்டா பிஷேக ஓவியம். வலது பக்கம் உள்ள அறையில் இருப்பவை அனைத்தும் சரபோஜியின் சேமிப்பு. 18ம் நூற்றாண்டு ஓவியங்கள், நூற்கள், தேசப்படங்கள், அகராதிகள், மராட்டிய மொழியில் உள்ள ராமாயணம், தெலுங்கு ராமாயணம் முதலியவை. இடது புறத்தில் சரபோஜியால் தொகுக்கப்பட்ட பல மொழி புத்தகங்கள் இதுதவிர வடமொழி, தமிழ், தெலுங்கு, மராட்டிய ஓலைச்சுவடிகள் ஆயிரக்கணக்கில் உள்ளன. அவற்றிலிருந்து பலவற்றை தேர்வு செய்து புத்தகங்களாக சரஸ்வதி மகால் நூல் நிலையம் வெளியிட்டு வருகிறது. 16,000 ஓலைச்சுவடிகளாகவும், 24,000 காகிதச் சுவடிகளாகவும் உள்ளன.

தர்பார் ஹால்:

தஞ்சையின் தர்பார் ஹால், மதுரை நாயக்கர் மகாலின் சிறிய தோற்றம் போல காணப் படுகிறது. அரசர் அமரும் இடத்தின் பின்புறம் சிவாஜி அரியாசனத்தில் அமர்ந்திருக்கும் தோற்றம் வரையப்பட்டுள்ளது. மந்திரிபிரதானிகள், படையினர், முதலியோர் இருக்கும் இடம் அழகாக காணப்படுகிறது. தர்பார் ஹாலின் இட, வலப்புற மாடங்களில் ராணிகள்/பெண்கள் இருந்து கொண்டு அரசவையின் நிகழ்ச்சிகள் காணும் இடங்கள் அழகாக அமைக்கப் பட்டுள்ளன.

அரண்மனையின் மையப் பகுதியில் கூட கோபுரம் இருக்கிறது. எட்டடுக்கு உள்ள கோபுர வடிவிலான மாடி அமைப்பு மேலே போகப் போக குவிந்து கொண்டே செல்கிறது. இதன் மேலிருந்து 10 கி.மீ. வரை தெளிவாக பார்க்க முடிகிறது. இது போலவே மாடங்கள் உள்ள மாளிகையும் மேலே ஏறுவதற்கான படிக்கட்டு அமைப்பும் அழகாகவும், கட்டட தொழிற் நுட்பத்தைக் காட்டுவதாகவும் அமைந்துள்ளது. இதற்கடுத்து கிழக்கு வாசல் வரும் வழியையும், ராஜா உயர்நிலைப்பள்ளி, பீட்டர்ஸ் உயர்நிலைப் பள்ளியும், திடல்களும் விளையாட்டு மைதானங்களும் கோட்டைக்குள்ளே அழகாக அமைக்கப்பட்டுள்ளன. ராஜா உயர்நிலைப் பள்ளியின் மேல் பகுதி. அரண்மனை மாடத்தில் நின்று கொண்டு விளையாட்டுக்களை காணக்கூடிய அழகான கட்டடக் கலை.

பீரங்கி மேடு:

கோட்டையிலிருந்து வெளியே செல்வதற்கான வடக்கு வாசல், கிழக்கு வாயில் அழகாக அமைக்கப்பட்டுள்ளது. கிழக்கு வாசலின் இடதுபுறம் உள்ள மேட்டில் பீரங்கி காணப்படுகிறது.தமிழகத்தில் வேறு எங்குமே காணமுடியாத 'நிலைபீரங்கி' இங்கு மட்டும்தான் காணப் படுகிறது. இதன் அளவு மிகப்பெரிய அளவுடையது. வெடிமருந்தை முழுவதும் இடித்து விட்டு, பீரங்கிக்கு கீழேயுள்ள கிணற்றிலிருந்து வெடிதிரியை கொழுத்தும் அமைப்பு காணப்படுகிறது.

அகழி:

ஊரைச் சுற்றி பெரிய அளவு அகழியை இன்றும் காணலாம். அகழியின் கிழக்கு, வடக்கு, தெற்கு பகுதிகள் மண்மேடிட்டு சாலைகள் போடப்பட்டு விட்டன. சிவகங்கைக் குளம், சாமந்தன் குளம், சேவப்ப நாயக்கன் ஏரி, தஞ்சையிலிருந்து மாரியம்மன் கோவில் வரை செல்லும் ஏரி போன்றவை நாயக்க, மராட்டிய கால நீர்நிலை தேக்க அமைப்பின் அழகைப் பறைசாற்றுகின்றன.


தமிழ்ச் சங்கம்:

தஞ்சையின் வடக்கே 2 கி.மீ. தொலைவில் கரந்தட்டாங்குடி இருக்கிறது. கரந்தை என்றும் அழைக்கப்படுகிறது. கோட்டையின் அகழியை அடுத்து வெளியில் உள்ள ஊர் இது. இங்கு 1911 ஆம் ஆண்டு கரந்தை தமிழ்ச்சங்கம் தொடங்கப்பட்டது. தமிழ், தமிழர், தமிழ் இலக்கியம், இசை போன்றவற்றிற்கு இச்சங்கம் பல்வகையில் பணியாற்றியுள்ளது. இதன் வளர்ச்சிக்கு காரணகர்த்தாவாக இருந்தவர் வழக்கறிஞர் தமிழவேள் உமாமகேசுவரனார் ஆவார். பல காலமாக 'தமிழ் பொழில்' என்ற செந்தமிழ் மாத இதழை இச்சங்கம் நடத்தி வருகிறது. புலவர் தேர்வு நடத்தி பல புலவர்களைச் சங்கம் மூலம் வெளிக் கொண்டு வந்துள்ளது. இங்குப் பணியாற்றியவர்களில் குறிப்பிடத்தக்கோர்: கரந்தை கவியரசு வேங்கடாசலனார், ந.மு. வேங்கடசாமி நாட்டார், நீ. கந்தாமி பிள்ளை, பேரா. பாலசுந்தரம், வரலாற்றறிஞர் சீ. கோவிந்த ராசனார் முதலியோர் ஆவர். சங்கத்திற்கு வராத தமிழ் அறிஞர்களே கிடையாது. கரந்தை செப்பேட்டை கண்டுபிடித்து சங்கம் பாதுகாத்து வருகிறது. 'யாழ்நூல்' கண்ட விபுலானந்தருக்கு உதவி செய்து நூலை சங்கம்தான் வெளியிட்டது. இந்தி போரில் கலந்து கொண்ட போராட்ட வீரர்களுக்கு உறுதுணையாக இருந்தது. தமிழர் வரலாற்றில் மறக்க முடியாது இடத்தைக் கரந்தைத் தமிழ்ச் சங்கம் பிடித்திருக்கிறது.

முக்கிய இடங்கள்:

திருவையாறு:

இவ்வூர் தஞ்சையிலிருந்து 13 கி.மீ. தொலைவில் காவிரி சூழ அமைந்துள்ளது. காவிரி ஐந்தாறாக பிரிந்து இவ்வூரிலிருந்து செல்கிறது. அதனால்தான் ஐயாறு என்று அழைக்கப்படுகிறது. அப்பர், ஞானசம்பந்தர் முதலிய சைவ பெரியார்களின் பாடல் பெற்ற தலம். அதனால் இங்குள்ள கடவுளுக்கு ஐயாறப்பர் என்பது பெயர். இதையே பிற்காலத்தில் பஞ்சாபகேசர் என்று வட மொழியில் மொழிபெயர்த்து விட்டனர். இங்குள்ள கோவில் ஆதித்த கரிகாலன் ஆட்சியில் கட்டப்பட்டது. இக்கோவிலில் சோழர், நுளம்பர், நாயக்கர், மராட்டிய கால கட்டடக் கலையின் பணியினைக் காணலாம். திருவையாறு ஆற்றங்கரை மண்டபம் கல்யாண மகால், இசைக்கல்லூரி போன்ற இடங்களில் மராட்டியர் கால கட்டிடக் கலையை ரசிக்கலாம். திருவையாற்றில் ஆயிரம் ஆண்டு காலமாக 'சப்தஸ்தானம்' என்ற நிகழ்ச்சி நடந்து வருகிறது. திருவையாற்றை சுற்றியுள்ள திருப்பழனம், திருச்சோற்றுத்துறை, திருவேதியக்குடி, திருக்கண்டியூர், திருப்பூந்துருத்தி, திருநெய் தானம், திருவையாறு ஆகிய ஊர்களின் கடவுள்கள் ஒன்றாகக் கூடி ஏழு ஊர் சுற்றி வரும் விழாவாக நடக்கிறது.

தியாகராஜ ஆராதனை:

திருவாரூரில் பிறந்த தியாகராஜர் திருவையாறில் வாழ்ந்தார். பொதுவாக பிராமணர்களுக்குச் சமாதி வைப்பது கிடையாது. இங்கு அவருக்கான சமாதியை அமைத்தவர் அவரது பக்தையான பெங்களூர் நாகரத்தினம்மாள் ஆவார். தியாகராஜ கீர்த்தனைகள் முழுவதும் தெலுங்கு பாடல்களால் ஆனது. ஆனால் அவர் பாடல்களில் கையாண்ட இசை மரபுகள் தேவாரம், தமிழக நாட்டுப் பாடல்களில் உள்ளவற்றிலிருந்து பெற்றிருக்கிறார் என்பதை பண்ணாராய்ச்சி வித்தகர் சுந்தரேசனார்; சரசுவதி மகால் தெலுங்கு புலவர் விஸ்வநாதன் முதலியோர் ஆராய்ந்து கண்டுபிடித்துள்ளனர். மேலும் தியாகராசரின் தெலுங்கு பாடல்களை ஆந்திரர் போற்றுவது கிடையாது. ஏனெனில் அதில் தமிழகத் தெலுங்கு மரபு இருப்பதுதான் என்று கூறப்படுகிறது. ஆண்டுதோறும் காவிரிக் கரையில் 'தியாகராஜ ஆராதனை'யில் பஞ்சரத்தின கீர்த்தனை பாடுவது மரபாக இருந்து வருகிறது.

தாராசுரம்:

தஞ்சை, கங்கை கொண்ட சோழபுரத்திற்கு கும்பகோணத்திற்கு 5 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. கும்பகோணத்தின் நுழைவாயிலாக இவ்வூர் விளங்குகிறது. இங்கு இரண்டாம் இராசராசன் காலத்திய கோவில் அழகுற கட்டப்பட்டுள்ளது. கோவிலின் முன்புறம் நந்தி மண்டபத்திற்குப் பின்புறம் இசைப்படிக்கட்டுகள் சிறப்பான முறையில் கட்டப்பட்டுள்ளன. கோயிலின் முன்மண்டபத் தேரை யானைகள் இழுத்துச் செல்வது போல அமைக்கப்பட்டுள்ளது. தூணில் பல்லர் பாணி, சோழர் பாணி தூண்கள் அழகாக வடிவமைக்கப்பட்டுள்ளன. தூண்களில் வேலைப்பாடு மிகுந்த சிற்பத் தொகுதிகள் காணக்கிடைக்கின்றன. ஓர் அங்குல பிள்ளையார், நந்தி முதலியன இருக்கின்றன. கற்களை சிற்பமாக்கிய பின் வழவழப்பாக மெருகேற்றும் பாணி பிற்கால சோழர் சிற்பங்களில் இருப்பதை இங்குள்ள கண்ணப்ப நாயனார் சிலையில் பார்க்கலாம். சரபமூர்த்தி சிலை, லிங்கோத்பர், தட்சிணாமூர்த்தி போன்றவை காணத்தக்கவை. இது தவிர பெரிய புராணக் காட்சிகள் வலப்புறம், இடப்புற வாயிற் கதவுக்கு அருகில் அழகாக செதுக்கப்பட்டுள்ளன. பிரகாரங்களின் கீழ் பகுதியில் இராமாயணக் காட்சி அழகுடன் வடிக்கப்பட்டுள்ளது. இடதுபுற மூளையில் பல்வேறு விதமான கல் சன்னல்களைக் காணலாம். அதன் கீழ்புறம், 4 உடல் ஒரு தலையுள்ள பெண்ணின் நடனம், கர்பிணிப் பெண்ணின் நடை முதலிய சிற்பங்கள் காணத்தக்கன. வில்வ மரத்தடியில் கீழ் யானை- காளை சிலை உள்ளது. இதில் தலையை மறைத்தால் ஒன்று மற்றதாகும் விந்தையைக் காணலாம். அதற்கு மேலுள்ள படிக்கட்டில் ஏறிப்பார்த்தால் 63 நாயன்மார்களின் சிலைகளும் சுவரில் புடைப்புச் சிற்பமாக செதுக்கப்பட்டு அக்கால தமிழ் எழுத்துக்களில் ஒவ்வொருவருடைய வாழ்க்கை வரலாறும் கீழே வடிக்கப்பட்டுள்ளன. இச்சிற்பங்களை ஒரே நேர்க்கோட்டில் பார்க்கும் போது பரவசம் ஏற்படுவது இயல்பு. இதனால்தானோ தாராசுரத்தை 'சிற்பக்கலைகளின் கூடம்' என்று அழைக்கின்றனர்.

கும்பகோணம்:

அப்பர், ஞானசம்பந்தரால் பாடப்பெற்ற பழைய நகரம். இவ்வூரை தேவாரம் குடமூக்கு, குடந்தை கீழ்கோட்டம் என்று அழைக்கிறது. இங்கு கும்பேஸ்வரர், நாகேஸ்வரர் போன்ற சைவக் கோவில்களும், சக்கரபாணி, சாரங்கபாணி, இராமசாமிக் கோவில் முதலிய வைணவக் கோயில்களும் இருக்கின்றன. முன்னிரண்டும் மங்களாசாசனம் செய்யப்பட்டவை. வைணவர்களின் 108 திருப்பதிகளில் இவ்வூரும் ஒன்றாகும். குடந்தை சாரங்கபாணிக் கோவிலில் கோபுரச் சிற்பங்களும், பரதநாட்டியத்தை உணர்த்தும் 108 கரணச் சிற்பங்களும் தேரும் காணத்தக்கவை. இராமசாமிக் கோவில் இரகுநாத நாயக்கன் திருப்பணி பெற்றது. மன்னரின் அழகான சிலையை இங்கே காணலாம். இது தவிர கொடிப் பெண்; பிரகாரத்தில் உள்ள இராமயண ஓவியம் இவையும் காணத்தக்கவை. திருநாகேசுவரர் கோவிலே பழமை வாய்ந்தது. பிரகாரத்தில் உள்ள சோழ அரச, அரசிகளின் சிலை உயிர்பெற்ற ஓவியம் போல கண்முன் தோன்றும் அழகை வியக்காதவர் இல்லை.

பட்டீஸ்வரம்:

தாராசுரத்திலிருந்து 5 கி.மீ. தொலைவில் பட்டீஸ்வரம் உள்ளது. சோழரின் கருவறை இருந்த பழையாறைக்கு இது அருகில் இருக்கிறது. கோவில் பல சுற்றுக்களைக் கொண்ட பெரிய கோவில். சோழர் கால துர்க்கையை இங்கு காணலாம். நாயக்கர் கால ஓவியங்களைக் காணலாம். நாயக்கரின் பிரதானி. கோவிந்த தீட்சதரின் சிலை இங்குள்ளது.

சுவாமிமலை:

தஞ்சையிலிருந்து 30 கி.மீ. தொலைவில் இருக்கிறது. முருகன் திருத்தலமாக இருந்து வருகிறது. இங்கிருந்து 2 கி.மீ. தொலைவில் திருவலஞ்சுழி உள்ளது. இங்கு மூலவரே கணபதிதான். இப்பெரிய கோவிலில் 17ம் நூற்றாண்டு ஓவியங்களைக் காணலாம்.

திருபுவனம்:

இது தஞ்சையிலிருந்து 44 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. இது குலோத்துங்க சோழனின் திருப்பணி. திருவிடை மருதூர்: குடந்தைக்கு இவ்வூர் அருகில் உள்ளது. இங்கு நாயக்கர் கால திருப்பணியைக் காணலாம். சுதை சிற்பங்கள், ஓவியங்கள், போன்றவையும், வீதி அழகும் காணத்தக்கவை. திருப்பனந்தாளுக்கு அருகில் உள்ள மானாம்பாடியில் சோழர்கால கோவிலில் அற்புதமான சிற்பங்கள் உள்ளது. இதுபோலவே தஞ்சைக்கு அருகில் உள்ள பசுபதி கோவிலுக்கு அருகில் உள்ள புள்ளமங்கையில் முற்கால சோழர்களின் சிற்பங்களைக் காணலாம்.

மனோரா:

இது சரபோஜி காலத்தில் கட்டப்பட்ட கோட்டையாகும். மினார் என்னும் முஸ்லீம் பாணி உயர்ந்த கோபுரம்; அகழி சூழ்ந்து காணப்படும் கோட்டை, கடற்கரை அருகில் உள்ளது. சேதுபாவா சத்திரத்திலிருந்து 5 கி.மீ. தொலைவில் உள்ளது. சிறந்த சுற்றுலாத் தலமாகும். இக்கோட்டையுள் ஆங்கிலம், தமிழ், மராட்டிய மொழிகளில் உள்ள கல்வெட்டு கூறுகிறது: ஃபிரெஞ்சு அரசன் போனபர்ட்டேவை ஆங்கிலேயர் வென்றதை குறிக்கும் முகமாக கட்டப் பட்டதாக கூறுகிறது.


வேளாண்மை:

2000 ஆண்டு காலமாக தஞ்சை மாவட்டத்து மக்கள் வேளாண்மையை சிறப்பாக செய்து வருவதை இலக்கியங்கள் பேசுகின்றன. கல்லணை ஒன்றே இதற்கான சான்றாகும். "சோழநாடு சோறுடைத்து" என்ற கூற்று இதனால்தான் உருவானது. இன்றும் தஞ்சைதான் தமிழ்நாட்டின் நெற்களஞ்சியமாக திகழ்கிறது. மூன்று போகம் விளைந்து வந்த தஞ்சை, இன்று காவிரி நீர் குறைப்பால் 2 போகமே நடந்து வருகிறது. தஞ்சை மாவட்டத்தின் மிகப் பெரிய தொழிலாக விவசாயமே இருந்து வருகிறது. விவசாயத்தின் சாகுபடி பரப்பு: 2,56,247 ஹெக்டெர். இதில் நெல் சாகுபடி மட்டும் 2,29,079 ஹெக்டேர். விவசாயத்தை மட்டும் சார்ந்திருப்போர் 4,70,735 பேர்கள். உற்பத்தியாகும் நெல்லை சேமிக்க உதவும் மிகப் பெரும் கிடங்குகள் அந்தந்த பகுதியில் கட்டப்பட்டுள்ளன. இதுதவிர அம்மன் பேட்டையில் உள்ள நவீன அரிசி ஆலையின் மூலம் அரிசியாக மாற்றப்படுகிறது.

வேளாண்மை ஆய்வு நிறுவனங்கள்:

நெல் விதையின் தரம், நேர்த்தி இவற்றை ஆய்வு செய்யும் நிறுவனங்களை ஆடுதுறை, பட்டுக்கோட்டை, ஒரத்தநாடு முதலிய இடங்களில் அரசு நிறுவியுள்ளது. நெல்லைத் தவிர வாழை 4784 ஹெக்டேர் பரப்பளவிலும், கரும்பு 9013 ஹெக்டேரிலும், பருத்தி 1585 ஹெக்டேரிலும் விளைகிறது.

பட்டு நெசவு:

தஞ்சை மாவட்டத்தில் பட்டு நெசவு தாராசுரம், திருபுவனம், அம்மாப்பேட்டை, முதலிய இடங்களில் பெருமளவு செய்யப்படுகிறது. பட்டு உற்பத்தியில் குடந்தைதான் முன் நிற்கிறது. ஆண்டுக்கு ரூ.150 கோடி மதிப்புடைய 7.5 இலட்சம் பட்டுப்புடவைகள் இங்கு உற்பத்தி செய்யப்படுகின்றன. இங்கு இதன் மூலம் 25000 தொழிலாளிகள் பயனடைந்து வருகின்றனர். சுமார் 7.5 லட்சம் பேர் இதில் ஈடுபட்டுள்ளனர். ஒரு பக்க பார்டர் என்பதே குடந்தை பட்டின் தனித்தன்மை.

தொழில் வளர்ச்சி:

தஞ்சை மாவட்டத்தில் வேளாண்மைதான் முக்கியத் தொழில். அதனால் வேளாண்மையை சார்ந்தே பிற தொழில்கள் வளர்ந்தன. இன்றும்கூட வேளாண்மையை அடிப்படையாக வைத்துத் தொழில்கள் தொடங்க வாய்ப்புகள் உள்ளன.

தஞ்சை:

தஞ்சாவூரில் டான்டெக்ஸ் உள்ளாடைகள் தொழிற்சாலை உடை தேவையை நிறைவு செய்கின்றன. தஞ்சாவூர் சர்க்கரை ஆலை, பெல் மெட்டல் யூனிட், ஈகான் மேக்கிங் லிமிடெட் போன்ற தொழிற்சாலைகளும், தஞ்சையை சுற்றிக் காணப்படுகின்றன. காகித பொம்மை தயாரித்தல், மெட்டி வேலை, இசைக்கருவிகள் தயாரித்தலும் முக்கிய கைத்தொழில்கள்.

கும்பகோணம்:

மைதீன் புகையிலை, தங்க விலாஸ் புகையிலை என்ற 2 பெரும் தொழிற்கூடங்களும், ஏ.ஆர்.ஆர். சீவல், பாக்கு, சுண்ணாம்பு தொழிற்கூடமும் பல தொழிலாளர்களுக்கு வேலை அளித்து வருகிறது. காளீஸ்வரி எவர்சில்வர் தொழிற்கூடம் போன்று பல சிறு தொழிற் கூடங்கள் நிறைந்து காணப்படுகிறது. 100க்கு மேற்பட்ட சாக்பீஸ் தொழிற்சாலைகள் உள்ளன. பாரம்பரியமாகவே நகை வேலைகள், மளிகை, பித்தளை பாத்திரங்களுக்கான மொத்த சந்தையாக குடந்தை விளங்கி வருகிறது. மெழுகு திரி, பவர்லைட் சோப், உமி எண்ணெய் தொழிற்சாலை போன்றவையும் இங்கு உள்ளது. கும்பகோணமும், சுவாமிமலையும் சிற்ப வேலை செய்யும் தொழிலுக்கு புகழ் பெற்ற இடங்களாகும்.

பட்டுக்கோட்டை:

பட்டுக்கோட்டையைச் சுற்றி தென்னை நிறைந்து காணப்படுகிறது. அதனால் இங்கு கயிறு தொழிற்சாலை மற்றும் தேங்காய் எண்ணெய் எடுக்கும் தொழிலும் நடைபெற்று வருகிறது. இவ்வூர் பிரமுகர்கள் வி.நாடிமுத்துப்பிள்ளை, அழகிரி, பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம், வானோலி குமாரவேல், நடிகர் விஜயகுமார், ராஜேஷ் போன்றவர்கள் குறிப்பிடத்தக்கவர்கள்.

பேராவூரணி:

பேராவூரணி வட்டத்தில் 85 பெருங் கிராமங்கள் உள்ளன. இவ்வூர்களுக்குப் பேராவூரணியே மையமாக இருப்பதால் வணிக முக்கியத்துவம் மிகுந்து காணப்படுகிறது. பல ஆயிரம் ஏக்கரில் தென்னந் தோட்டங்கள் வளர்ந்து காடாக காட்சியளிக்கும். அதனால் இளநீர், தேங்காய், கொப்பரை, மட்டை, போன்றவற்றின் துணைத் தொழில்களாக, கீற்று முடைவது, மட்டையிலிருந்து கயிறு திரித்தல், கொப்பரை, காயவைத்து தேங்காய் எண்ணெய் ஆட்டுவது போன்ற தொழில்கள் பேராவூரணியைச் சுற்றி நடைபெறுகிறது. தேங்காய் பவுடர் செய்யும் தொழிற்சாலை உள்ளது. குழல் விளக்கில் உபயோகப்படுத்தப்படும் எலக்ட்ரானிக் சோக் என்கின்ற சாதனத்தை 'ஓபல்' என்ற பெயரில் தயாரிக்கும் எலட்ரோஸ்டிரீக்ஸ் என்ற நிறுவனம் இந்திய அளவில் இயங்கி வருகிறது. மீன் பிடி வலை செய்யும் தொழிற்சாலைகள் நிறைந்துள்ளது. இவ்வூரைச் சார்ந்த பெருமக்கள்: முன்னாள் அமைச்சர் கோவேந்தன், காங்கிரஸ் தியாகிகள் வைரத்தேவர், வைரவன் சேர்வை, குருவிக்கரம்பை வேலு, கவிஞர் குருவிக்கரம்பை சண்முகம், ஏ.கே. சுப்பையன்.

திருவையாறு, திருக்காட்டுப்பள்ளி:

இந்த இரண்டு ஊர்களை உள்ளடக்கிய கிராமங்களிலிருந்து தான் தஞ்சைக்கு காய்கறி, வாழை இலை, பூ, தண்டு, காய் முருங்கைக் கீரை, அகத்துக்கீரை, வெற்றிலை முதலியவை சந்தைக்கு மொத்த வியாபாரத்திற்கு செல்கின்றன. காவிரி பாயும் இப்பகுதி மிகுந்த வளமானதால் ஆண்டு முழுவதும் வேளாண்மை தொடர்ந்து நடந்து வருகிறது.

பாபனாசம்:

1910 ஆம் ஆண்டு முதல் தனிவட்டமாக திகழ்கிறது. இவ்வட்டத்தில் 104 பெரிய கிராமங்கள் உள்ளன. ஏடு தேடிய ஏந்தல் உ.வே. சாமிநாதய்யர் பிறந்தது இங்குள்ள உத்தமதான புரத்தில்தான். தமிழிசை வாணர் சிவன் பிறந்தது பாபநாசத்தில்தான். இவ்வூர் கோவிலில் 108 லிங்கங்கள் உள்ளன. பாபநாசம், அய்யம்பேட்டை, பண்டாரவடை என்ற மூன்று பெரிய ஊர்களிலும் முஸ்லீம் மக்கள் பெருமளவில் வாழ்ந்து வருகின்றனர். இம்மூன்று ஊர்களிலும் நல்ல வண்டல்மண் கொண்ட செழிப்பான நெல் விளையும் பகுதிகள் ஆகும். இப்பகுதியிலிருந்து தஞ்சை சந்தைக்கு தினமும் பூக்கள் அனுப்பப்பட்டு வருகிறது.

ஒரத்த நாடு:

இப்பகுதி 99 கிராமங்களைக் கொண்டது. 1954 முதல் தனிவட்டமாகச் செயல்பட்டு வருகிறது. நெல், கரும்பு, வேர்க்கடலை போன்றவை சாகுபடி செய்யப்படுகின்றன. சரபோஜி மன்னரால் கட்டப்பட்ட 'கல்சவுக்கம்' வேலைப்பாட்டோடு காணப்படுகிறது. இவ்வூரைச் சுற்றி உழூர், கண்ணந்தங்குடி, பாப்பா நாடு, தென்னமநாடு போன்றவை உள்ளன. குறிப்பிட்டுச் சொல்ல வேண்டிய பெருமக்கள் பாப்பா நாடு ஜமீன்தார், மலையப்பன் ஐ.ஏ.எஸ்.; எல். கணேசன், முன்னாள் அமைச்சர் எஸ்.டி. சோமசுந்தரம், தோழர் சிவராமன் முதலியோர்.

மீன்பிடிப்பு:

அதிராம்பட்டினம் சாளுவநாயக்கன்பட்டினம், சேதுபாவாசத்திரம், அம்மிணி சத்திரம் போன்ற ஊர்களில் மீன்பிடிப்பு முக்கிய தொழிலாகும். இங்குப் பிடிக்கப்படும் மீன்களும் உள்நாட்டில் மிகுந்த வரவேற்பிருக்கிறது. கருவாடுக்கும் இவ்வூர்கள் சிறப்புப் பெற்றுத் திகழ்கிறது. உப்பளத் தொழில் பெருமளவு நடந்து வருகிறது.

அதிராம்பட்டினம்:

இங்கு மேட்டூர் கெமிக்கல்ஸ் நிறுவனத்தின் ரசாயன முறையிலான உப்பு தயாரித்தல் நன்கு நடந்து வருகிறது.

செங்கிப்பட்டி:

இங்கு 'காசநோய் பிரிவை' மருத்துவர்கள் பார்க்கும் செங்கிப்பட்டி சானிடோரியம் அமைந்துள்ளது.

திருப்பனந்தாள்:

குடந்தைக்கு அருகில் அமைந்துள்ள ஊர். மடத்திற்குச் சொந்தமான செந்தமிழ்க் கல்லூரி பல ஆண்டு காலமாக இயங்கி வருகிறது. இங்கு தமிழ் படிக்கும் மாணவர்களுக்கு உண்ண உணவும், இருக்க இடமும் இலவசமாக தந்து கல்வி கற்பிக்கப்படுகிறது.

திருவாடுதுறை:

திருவாடுதுறை மடம் 15ஆம் நூற்றாண்டில் தோன்றியது. சைவத்தையும், தமிழையும் இரு கண்களாகக் கொண்டு செயல்பட்டு வருகிறது. இங்குதான் மகாவித்வான் மீனாட்சி சுந்தரம்பிள்ளை தமிழ் கற்பித்து வந்தார். அவருடைய மாணவரே உ.வே. சாமிநாதய்யர். பழைய கால குருகுலக் கல்வி முறையில் மடத்திலேயே தங்கி, உணவு வுண்டு படித்தவர் உ.வே.சா. மடத்தின் வாயிலாக 100க்கும் மேற்பட்டநூல்கள் வெளியிடப்பட்டுள்ளன. பல கொடைகள் நிறுவப்பட்டுள்ளன.

தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக் கழகம்:

தமிழக அரசால் 1981 ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. மொழி, இலக்கியம் பற்றிய ஆய்வுகள் செய்து அவற்றை வெளியிடுவது; கல்வெட்டு மற்றும் ஓலைச்சுவடிகள் அவற்றை புத்தகமாக வெளியிடுவது; கலைக் களஞ்சியம் தயாரிப்பது; தமிழ்ப் பண்பாட்டை உலகு உணர்த்தும் வண்ணம் ஆய்வு; அருங்காட்சியகம் அமைத்தல்; உலகத் தமிழர்களுடன் உறவு அமைத்தல் அந்நிய நாட்டினர்க்கு தமிழ் கற்பித்தல் ஆகிய அரும்பணிகளை இப்பல்கலைக்கழகம் ஆற்றி வருகிறது. மிகப்பெரிய நூலகம் இங்கு அமைந்துள்ளது. 1996 ஆம் ஆண்டு உலகத் தமிழ் மாநாடு இங்கு சிறப்பாக நடத்தப்பட்டது.

கலை வளர்க்கும் தஞ்சை:

உழவுத் தொழில் வளமாக நடந்ததால் மற்ற நேரங்களில் கலை வளர்வதற்கு தஞ்சை மக்கள் மிகுந்த ஊக்கம் அளித்ததால் இங்கு ஆடல், பாடல், நாடகம், கல்வி, கலை, கைத் தொழில்கள், நாட்டுப்புறக்கலைகள் முதலியவை பெருமளவு வளர்ந்து இன்று தமிழகம் முழுவதற்குமான கலைஞர்களை அளித்துள்ளது.

கலைகள்:

கோவிற்கலைகள்:

தஞ்சை, குடந்தை, மானம்பாடி, தாராசுரம், திருவிடைமருதூர், புள்ளமங்கை, திருவையாறு முதலிய இடங்களில் கோவில்கட்டடக் கலை, சிற்பக்கலை, ஓவியக்கலை முதலியவை பெருமளவு வளர்ந்துள்ளதை இங்கு காணலாம்.

இசை:

தமிழிசை மும்மூர்த்திகளான அருணாசல கவிராயர் (1711-78) முத்துத் தாண்டவர் (1560-1670); மாரிமுத்தாப்பிள்ளை (1712-87) பிறந்தது பழைய சோழ மண்டலம்தான். தெலுங்கிசை மும்மூர்த்திகளான தியாகராஜ சுவாமிகள் (1767-1847); முத்துசாமி தீட்சதர் (1775-1834), சியாமா சாஸ்திரிகள் (1762-1827) இவர்கள் பிறந்தது சோழமண்டலம்தான். தெலுங்கிசை எவ்வாறு தமிழிசையை அப்பட்டமாகக் கவர்ந்து வளர்ந்தது என்பதையும், அவ்விசைக்கு இசை இலக்கணம் சரியாக அமையவில்லை என்பதையும் கண்டிபிடித்த ஆபிரகாம் பண்டிதர் இயற்றிய 'கருணாமிருதசாகரம்' தஞ்சையில் தான் உருவானது. 'யாழ்நூல்' இயற்றிய விபுலானந்தர் அந்நூலை தஞ்சை கொள்ளாம்புத்தூரில் தான் அரங்கேற்றினார். பதிப்பித்தது கரந்தை தமிழ்ச் சங்கம். இது தவிர வாய்ப்பாட்டில் வல்லவர்களும் இங்குதான் தோன்றினார்கள். தமிழிசைச் கருவிகளான நாதசுரம், தவில், மிருதங்கம், வீணை முதலியன இங்கு செய்யப்படுகின்றன. நாதசுர சக்கரவர்த்தி திருவாடுதுறை இராஜரத்தினம், திருவிடைமருதூர் வீராசாமிபிள்ளை, வலங்கை மான் சண்முகசுந்தரம் முதலியோர் சாதனையாளர்கள். பிடில் இராஜமாணிக்கம் பிள்ளை புகழ் வாய்ந்த் கலைஞர். வயலினை கர்நாடக இசையில் பயன்படுத்தியவர் தஞ்சை நால்வர்களில் ஒருவரான வடிவேல்பிள்ளை ஆவார். ஆங்கிலேய பேண்ட் வாத்தியமும் இங்குதான் முதன்முதலில் நம்மூர் விழாவில் வாசிக்க ஆரம்பித்தனர். வீணை தனம்மாள், தாகூர் முன்பு வாசித்துப் புகழ் பெற்றவர்.

நடனம்:

ஆடவல்லானின் அழகான செப்புத் திருமேனிகளை சோழநாடு முழுவதும் காணலாம். 108 கரணங்களில் 81 கரணங்கள் சிவபெருமான் ஆடுவது போல தஞ்சையில் உள்ள சிற்பங்களும், சாரங்கபாணிக் கோவில் சிற்பங்களும் பரதத்திற்கு எடுத்துக் காட்டுடாக இருக்கின்றன. தமிழகம் தவிர பரத முத்திரைக் காட்டும் சிற்ப தொகுதிகள் வேறு மாநிலத்தில் கிடையாது.

18 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த தஞ்சை நால்வர்களான பொன்னையா, சிவானந்தம், சின்னையா, வடிவேலு ஆகியோரே சதிராக இருந்த நடனக் கலையை புதிய பாணிகளைச் சேர்த்து பரதத்திற்கு புத்துயிர் ஊட்டினர். பரத பள்ளிகளில் ஒவ்வொன்றும் ஒவ்வொரு முத்திரையைப் பார்க்கலாம். பந்தநல்லூர் மீனாட்சி சுந்தரம்பிள்ளை, வழுவூர் இராமய்யா பிள்ளை போன்ற புகழ்பெற்ற நட்டுவனார்கள் பல பள்ளிகளையும், நடன மணிகளையும் உருவாக்கினார்கள். தஞ்சை மரபில் வந்தவர்தான் தஞ்சை பால சரஸ்வதி அம்மையார். இவர் உலகப் புகழ்பெற்றவர் ஆவார். இவர் பற்றிய திரைப்படம் சத்யஜித்ரேயால் எடுக்கப் பட்டுள்ளது.

நாடகம்:

இராஜராஜன் காலத்திலேயே பெரிய கோவிலில் நாடகமாடி வந்ததற்கான சான்றுகள் கிடைத்துள்ளன. 'இராஜராஜவிஜயம்' என்ற நாடகம் பெரிய கோவில் நாடக மேடையில் அக்காலத்தில் நடந்ததாம். சரபோஜி காலத்தில் 'சபோஜி பூபாலா குறவஞ்சி' இக்கோவிலில் அரங்கேற்றப்பட்டுள்ளது.

நவாப் ராஜமாணிக்கம்பிள்ளை இங்கு பல நாடகங்கள் நடித்துள்ளார். சங்கரதாச சுவாமிகள் இங்கிருந்த 'கல்யாணராமய்யர்' நாடக மன்றத்தில் பணியாற்றியுள்ளார். இதைத் தொடர்ந்து குடந்தை வாணிவிலாச சபை, தஞ்சை சுதர்சன சபை, குமார கான சபை போன்றவை தோன்றின. இங்குதான் எம்.ஜி.ஆர். சக்ரபாணி, சாரங்கபாணி, காளி என். ரத்தினம், பெரியநாயகி முதலியோர் தோன்றினர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக